கொரோனா வைரஸூக்கு எதிரான பாதுகாப்பான தடுப்பூசி ஒன்று இந்த வருட இறுதிக்குள் தயாராகலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந் – ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு தலைமையகத்தில் ஜெனீவா ஐக்கிய நாடுகளின் நிருபர்கள் சங்கம் (ACANU) ஏற்பாடு செய்த செய்தியாளர் கூட்டத்தில் நேற்று கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் கூறினார்.
கொரோனா தடுப்பூசி கிடைக்கும்போது அதனை அனைத்து நாடுகளுக்கும் சமமாகப் பங்கீடு செய்ய உலக நாடுகளின் தலைவா்கள் அர்பணிப்போடு முன்வர வேண்டும் எனவும் கெப்ரேயஸ் அழைப்பு விடுத்தார்.
ஒன்பது சோதனை தடுப்பூசிகள் உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் சா்வதேச தடுப்பூசி திட்டத்தின் கீழ் உள்ளன. 2021 ஆம் ஆண்டின் இறுதியில் சுமார் 2 பில்லியன் தடுப்பபூசிகளை உலகெங்கும் விநியோகிப்பதை நோக்கமாகக் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவா் தெரிவித்தார்.
இதேவேளை, கொரோனா தொற்று நோய் நெருக்கடி குறித்து உலக சுகாதார அமைப்பு உலகுக்கு சரியான தகவல்களை வழங்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் தொடர்ந்து முன்வைத்துவரும் குற்றச்சாட்டுக்களை கெப்ரேயஸ் மீண்டும் உறுதியாக மறுத்துள்ளார்.
சுகாதார அவசர காலங்களுக்கான வர்த்தகம் மற்றும் பயண கட்டுப்பாடுகள் குறித்த வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு உலகுக்கு வழங்கியது என அவா் குறிப்பிட்டார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்